பாகிஸ்தானின் கைபர் பக்தூங்வாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி

விபத்துக்குள்ளான பேருந்தில் ஆறு சீனர்கள், இரண்டு துணை ராணுவப்படை காவலர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருந்ததாக தெரிய வந்துள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ராமநாதபுரம் வந்தடைந்த பாகிஸ்தான் போர் வெற்றி நினைவுச்சுடர்

    கடற்படை

    பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர்களுக்கு வெற்றிச்சுடருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை குறிக்கும் வெற்றிச்சுடர் இன்று ராமநாதபுரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமுக்கு வந்தடைந்தது. இதையொட்டி சிறப்பு அணி வகுப்பு நடைபெற்றது.

    1971ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் 50 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் விதமாக வெற்றிச்சுடர் ஒன்று இந்தியா முழுவதும் போரில் பங்கேற்று உயிரிழந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு செல்லும் பயணத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

    பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்ட இந்த வெற்றிச்சுடர், தமிழகத்தின் தூத்துக்குடி ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்துக்கு நேற்று மாலை வந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்புடன் கமெண்டர் வெங்கடேஷ்ஐய்யர் வெற்றிச்சுடரை பெற்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    முன்னாள் ராணுவ வீரர்களும் வெற்றிச்சுடருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர்; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், அதன் பின்னர் டிஐஜி அலுவலகத்திலும் வெற்றிச்சுடர் கொண்டு செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

    இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இருவரின் வீடுகளுக்கு வெற்றிச்சுடர் எடுத்துச் செல்லப்பட்டது.

    நாளை வியாழக்கிழமை நண்பகலில் இந்த வெற்றிச்சுடர் தனுஷ்கோடிக்கும், அங்கிருந்து அப்துல் கலாம் தேசிய நினைவக அருங்காட்சியகம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உரிய மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், மதுரைக்கு வெற்றிச்சுடர் கொண்டு செல்லப்படுகிறது.

    இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஐ.என்.எஸ் பருந்து நிலைய கமெண்டர் வெங்கடேஷ் அய்யர் தென் தமிழகத்தில் கடற்படை செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

    "1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் நினைவாக இன்று ஐஎன்எஸ் பருந்து உச்சிப்புளி கடற்படை தளத்தில் வெற்றிச்சுடருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. போரில் உயிர் நீத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரு வீரர்களின் வீட்டிற்கு இந்த வெற்றிச்சுடர் அனுப்பப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசிடமும் விரிவாக்க பணிகளின்போது ரயில் தண்டவாளங்கள் உள்ளதால் தென்னக ரயில்வே துறையிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது."

    "விரைவில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் விரிவாக்கம் செய்யப்படும். மன்னார் வளைகுடா கடற்பரப்பில் தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதையடுத்து பாக் ஜலசந்தி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது."

    இதே போல் ஐஎன்எஸ் பருந்து விமான தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன," என்று வெங்கடேஷ் அய்யர் கூறினார்.

    கடந்த மே மாதம் இலங்கையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் அதில் இருந்து வெளியான எண்ணெய் கசிவுகள் இந்திய கடற்பரப்பிற்குள் வரக்கூடும் என இலங்கையை சேர்ந்த கடல்வாழ் உயிரின விஞ்ஞானிகள் தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, "இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கடலில் எண்ணெய் கசிவு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்திய கடற்பகுதிக்குள் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததாக எதுவும் தென்படவில்லை," என்று வெங்கடேஷ் அய்யர் பதிலளித்தார்.

    கடற்படை
  2. இந்திய ராணுவம் அறிக்கை

    சென்ற பிப்ரவரி மாதம் இந்திய மற்றும் சீன படைகள் விலக்கப்பட்ட கிழக்கு லடாக் பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க இரண்டு நாடுகளும் எந்த விதமான முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது என்கிறது பிடிஐ செய்தி முகமை.

    மீதமுள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கவே இரு தரப்பும் விரும்புவதாக இந்திய ராணுவம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. காவிரி மேகேதாட்டு தடுப்பணை: பிரதமருக்கு கடிதம் அனுப்ப புதுச்சேரி அரசு முடிவு, நடராஜன் சுந்தர், புதுச்சேரி

    புதுச்சேரி
    படக்குறிப்பு, காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்

    காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசிக்கும் மேகேதாட்டு தடுப்பணைக்கு அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்ப புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

    இதே விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில், மேகேதாட்டு தடுப்பணைக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    அதை மேற்கோள்காட்டி, புதுச்சேரிக்கும் காவிரி நீர் விவகாரத்தில் தொடர்பிருப்பதால் தமிழக அரசு போல புதுச்சேரி அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேற்று சந்தித்து மனு அளித்தார்.

    இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் அவரது அலுவலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பொதுப்பணித்துறை லட்சுமி நாராயணன், காரைக்கால் பிராந்திய அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர்கள் திருமுருகன், பி.ஆர்.சிவா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    "காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு நீர் கிடைக்காத நிலை உருவாகும். இதனால் விவசாயத்தை பிரதான கொண்டுள்ள காவிரி கடைமடைப் பகுதியான புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு‌ பாதிப்பை ஏற்படுத்தும்," என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

    முன்னதாக காவிரி நீர் காரைக்கால் வந்தபோது 15 ஹெக்டேர் விவசாயம் செய்தனர். ஆனால் , தற்போது 4 ஆயிரம் ஹெக்டேர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர். காவிரியிலிருந்து புதுச்சேரிக்கு வர வேண்டிய 7 டி.எம்.சி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் எழுதுவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  4. பாகிஸ்தான் பேருந்து விபத்தில் சீன பொறியாளர்கள் உள்பட 10 பேர் பலி, பிபிசி உருது சேவை

    பாகிஸ்தான் பேருந்து விபத்து

    பட மூலாதாரம், TWITTER: ADRADIOPAKISTAN

    படக்குறிப்பு, கைபர் பக்தூங்வா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளான பகுதி

    பாகிஸ்தானின் கைபர் பக்தூங்வா மாகாணத்தில் உள்ள மேல் கோஹிஸ்தானின் தாஸு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அணை திட்டம் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் ஆறு சீனர்கள் உள்பட குறைந்தபட்சம் 10 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய கோஹிஸ்தான் துணை ஆணையாளர் ஆரிஃப் கான் யூசஃப்சாய், அந்த பேருந்து சாலை விபத்தை எதிர்கொண்டது. இது ஒரு தீவிரவாத தாக்குதலோ வெடிப்பு சம்பவமோ இல்லை என்று கூறினார்.

    மிகவும் அபாயகர வளைவைக் கொண்ட சாலைகளில் இதுபோன்ற விபத்து துரதிருஷ்டவசமாக நடப்பதாக அவர் தெரிவித்தார். "சம்பவ பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன," என்று துணை ஆணையாளர் ஆரிஃப் கான் யசஃப்சாய் தெரிவித்தார்.

    அந்த பேருந்தில் ஆறு சீனர்கள், இரண்டு துணை ராணுவப்படை காவலர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனினும், மாவட்ட நிர்வாகத்தின் உயரதிகாரியொருவர், சீன பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து சென்ற பகுதியில் மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

    காரகோரம் நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    தாஸு பகுதியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது மேல் கோஹிஸ்தான் பகுதி. அங்கு சம்பவ பகுதியை பார்வையிட கைபர் பக்தூங்வா மாகாண நிர்வாகத்தின் சார்பில் உயர்நிலைக்குழு புறப்பட்டுள்ளது.

    மாகாண முதல்வரின் சிறப்பு செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் செய்தியாளற் மொஹம்மத் ஜுபைரிடம் பேசுகையில், "புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது. வழக்கம் போல அணை திட்ட பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பேருந்து கவிழ்தது. அப்போது பேருந்துக்குள் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதை கேட்க முடிந்தது," என்றனர்.

    சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள், பேருந்து விழுந்த இடத்தை நோக்கி உடனடியாக நாங்கள் சென்றோம். காயம் அடைந்தவர்கள் உதவிக்காக குரல் கொடுத்ததையும் கேட்க முடிந்தது," என்று கூறினர்.

    பாகிஸ்தான் விபத்து
  5. "நீட் வேண்டாம்" - தமிழக முதல்வரிடம் ஏ.கே. ராஜன் குழு அறிக்கை, முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ்

    நீட் தமிழக அரசு

    பட மூலாதாரம், TNDIPR

    மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத்தேர்வுக்காக மத்திய அரசு நடத்தும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தீர்வான நீட் தேவையில்லை என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஏ.கே. ராஜன் குழு இன்று அறிக்கை அளித்துள்ளது.

    இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. ராஜன், குழுவில் உள்ளவர்களின் தனிப்பட்ட கருத்துகளை அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை என்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே தங்களுடைய அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில், பெரும்பாலோனோர் நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தையே கொண்டிருந்ததாகவும் ஏ.கே. ராஜன் கூறினார்.

    முன்னதாக, மாநிலத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் விஷயத்தில், நீட் தேர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஏ.கே. ராஜன் தலைமையிலான 9 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு கடந்த ஜூன் 10ஆம் தேதி கேட்டுக் கொண்டது.இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பலதரப்பட்ட மக்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் கருத்துகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் 165 பக்க அறிக்கையை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அளித்துள்ளது.

    நீட் தேர்வு குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இந்தக் குழு அறிவித்ததையடுத்து சுமார் 86 ஆயிரம் பேர் இந்தக் குழுவிடம் தமது கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

    இதற்கிடையே, இந்தக் குழு அமைக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பா.ஜ.கவின் செயலர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    NEET

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்
  6. ஆப்கன் பெண் உரிமைக்காக குரல் கொடுக்கும் துணிச்சல் போராளி

    ஷகிலா சரீன் என்ற ஆப்கன் பெண், தாய்நாட்டில் ஆயுததாரிகளின் ஒடுக்குமுறைக்கு மத்தியில் பெண் உரிமைக்காக குரல் கொடுத்தார்.

    குடும்ப வன்முறையின் உச்சமாக தனது கணவரால் முகத்தில் சுடப்பட்டபோதும், உருக்குலையாமல் வெளிநாடு சென்று அங்கிருந்தவாறு தாயக பெண்களுக்கு தன்னம்பிக்கை மலர குரல் கொடுத்து வருகிறார். அவர் பகிரும் கருத்துகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

    காணொளிக் குறிப்பு, ஷகிலா சரீன்: ஆப்கன் பெண்களுக்காக தன் முகத்தையும் குரலையும் பயன்படுத்தும் சமூகப் போராளி
  7. சீனாவின் ஷூஸு விடுதி கட்டடம் இடிந்த சம்பவத்தில் 17 பேர் பலி

    சீனா விபத்து

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சீனாவில் விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள்

    சீனாவின் கிழக்கே உள்ள ஷூஸு நகரில் விடுதிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

    36 மணி தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் புதைந்த 23 பேரில் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க முற்பட்ட உரிமையாளரின் திட்டத்தால் அது பலவீனம் அடைந்து இடிந்து விழுந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில்தான் அந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளதாக கூறுகிறது அந்த நாளிதழ் செய்தி.

    தொடக்கத்தில் அந்த கட்டடம் மூன்று மாடிகள் கொண்டதாக இருந்தது. ஆனால், பின்னர் அதன் மேல் தளம் ஒவ்வொன்றாக கூட்டப்பட்டதாக அருகே வசிக்கும் குடியிருப்புவாசி ரெட் ஸ்டார் நியூஸ் என்ற ஊடகத்திடம் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜியாங்ஸு மாகாண அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஷுஸுவில் உள்ளது சிஜி கையுவான் என்ற விடுதி. இந்த கட்டடம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப்பணியில் 600க்கும் அதிகமானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். 54 அறைகள் கொண்ட விடுதியில் 18 பேர் இருந்ததாகவும் பிறகு அங்கு ஆவணத்தில் பதிவு செய்யப்படாத மேலும் சில விருந்தினர்கள் இருந்ததும் தெரிய வந்தது.

    இவர்களில் உயிருடன் மீட்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளது.

    சீனாவில் பலவீனமான கட்டுமானத்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஆண்டு ஃபுஜியான் மாகாணத்தில் விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், அந்த கட்டடம் வலுவிழந்தே சம்பவத்துக்கு காரணம் என்று புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

    சீனா விபத்து

    பட மூலாதாரம், Getty Images

    சீனா விபத்து

    பட மூலாதாரம், Getty Images

  8. தென்னாப்பிரிக்காவில் நீடிக்கும் வன்முறை; கடைகள் சூறை - 72 பேர் பலி

    தென்னாப்பிரிக்கா

    பட மூலாதாரம், EPA

    தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.

    சொவேட்டோ நகரில் கடைகள் சூறையப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். டர்பன் நகரில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து குழந்தை ஒன்று தரைத் தளத்துக்கு தூக்கி வீசப்படும் காட்சியை பிபிசி படம்பிடித்திருக்கிறது.

    நாட்டின் முக்கியப் பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டியதாக 12 பேரை அடையாளம் கண்டிருப்பதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுவரை 1,234 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

    1990-களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிக மோசமான வன்முறை இதுவென அதிபர் சிரில் ராமஃபோஸா கூறியுள்ளார்.

    ஊழல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  9. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்தப் பகுதியில் சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். இணைந்திருங்கள்.