தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா டெல்டா பிளஸ் திரிபு பாதிப்பு

"இந்தத் திரிபால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. அதில், அவர் டெல்டா பிளஸ் திரிபால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார்" என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா டெல்டா பிளஸ் பாதிப்பு: மாநில சுகாதாரத்துறை

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா டெல்டா பிளஸ் திரிபு கண்டறியப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து பல்வேறு திரிபுகளாக உருவெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்ட திரிபுக்கு டெல்டா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தத் திரிபு மீண்டும் மாற்றம் அடைந்தால் அது டெல்டா பிளஸ் என அழைக்கப்படுகிறது.

    இந்த டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் திரிபு, எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக கலப்பது, எதிர்ப்பணு ஆற்றல் சிகிச்சைக்கு எதிர்வினையாற்றுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயலாற்றுவது போன்ற தன்மைகளை கொண்டிருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது.

    இந்த நிலையில், இந்த டெல்டா பிளஸ் திரிபு கூடுதல் ஆபத்தானதா இல்லையா என்பது குறித்து உலகம் முழுவதும் மருத்துவ நிபுணர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

    இந்த நிலையில், இந்தத் திரிபால் தமிழ்நாட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

    "இந்தத் திரிபால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. அதில், அவர் டெல்டா பிளஸ் திரிபால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார்" என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்த டெல்டா திரிபால் இந்தியாவில் இதுவரை 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குதல்

    தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனாத் தொற்றில் அஞ்சத்தக்க திரிபான டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குல் ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நோயாளி குணமடைந்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து பல்வேறு திரிபுகளாக உருவெடுத்துவரும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்ட திரிபுக்கு டெல்டா என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்குப் பிறகு இந்தத் திரிபு மீண்டும் திரிபடைந்தது. இந்தத் திரிபு டெல்டா பிளஸ் என குறிப்பிடப்படுகிறது.

    டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த திரிபு, எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக கலப்பது, எதிர்ப்பணு ஆற்றல் சிகிச்சைக்கு எதிர்வினையாற்றுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயலாற்றுவது போன்ற தன்மைகளை கொண்டிருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், இந்த டெல்டா பிளஸ் திரிபு கூடுதல் ஆபத்தானதா இல்லையா என்பது குறித்து உலகம் முழுவதும் மருத்துவ நிபுணர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

    இந்த நிலையில், இந்தத் திரிபால் தமிழ்நாட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

    "இந்தத் திரிபால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. அதில், அவர் டெல்டா பிளஸ் திரிபால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால், அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டார்" என்றார் ஜெ. ராதாகிருஷ்ணன்.

    இந்த டெல்டா திரிபால் இந்தியாவில் இதுவரை 40 பேர்வரை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

  3. முதுகுளத்தூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக சர்ச்சை - ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

    தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர்.

    அறிவியல் பாடம் எடுக்கும் அந்த ஆசிரியர், பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவிப்பதும், அப்படி வர மறுத்தால் உனக்கு மதிப்பெண்ணை குறைப்பேன் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இதுபோல மேலும் சில மாணவிகளுக்கு அந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஒரு மாணவியிடம் அந்த ஆசிரியர் பேசும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த நிலையில், மாணவி ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாட்களுக்கு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே, இன்று பள்ளி வளாகத்தை அதிகாரிகள், பார்வையிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் படித்து வந்த மாணவிகள், அவர்களின் பெற்றோர்களிடம் கூடுதல் எஸ்பி லயோலா இக்னோசியஸ், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்த ஆசிரியரால் வேறு யாராவது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் 94981 29498, 94432 82223, 94982 07461, 83000 00592 ஆகிய நான்கு செல்பேசி எண்களை வெளியிட்டுள்ளார்.

    இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்சோ, சிறார் நீதிபரிபாலன சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு குண்டர் சட்டத்திலும் அடைக்கப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் எச்சரித்துள்ளார்.

  4. கொரோனாவை எதிர்கொள்ள 3 டோஸ் தடுப்பூசி தேவையா?

    கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள மூன்றாவது டோஸ் Vaccine பரிசோதனையை தொடங்கியது பிரிட்டன்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  5. ‘ஒன்றியம்’ என்ற சொல்லை பயன்படுத்துவோம் – மு.க. ஸ்டாலின்

    “அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா#UnionOfStatesஎன்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா.#ஒன்றியம்என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் – பயன்படுத்திக்கொண்டே இருப்போம்” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை: சட்டப்பேரவையில் தமிழக அரசு

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் தனி அலுவலர் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாக்களை பேரவையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

    மேலும் புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,இந்த அறிவிப்பை பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  7. புதுச்சேரி அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் அளித்த முதல்வர்

    PUDUCHERRY

    புதுச்சேரியில் தமது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனிடம் வழங்கியுள்ளார் முதல்வர் ரங்கசாமி.

    புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து ஆளும் கூட்டணி உறுப்பினர்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமியை தேர்வு செய்தனர்.

    இதையடுத்து, புதுச்சேரி முதல்வராக கடந்த மே 7ஆம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். ஆனால், அவர் முதல்வர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவரது அமைச்சரவையில் யார் இடம்பெறுவர், கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அதில் வாய்ப்பு தரப்படுமா, துணை முதல்வர் பதவி இடம்பெறுமோ என்பது புதிராகவே இருந்தது.

    இதற்கிடையே, துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை பாஜக கேட்பதாக தகவல் வெளியானது.

    சில வார பேச்சுவார்த்தை இழுபறிக்குப் பிறகு, பாஜகவிற்கு சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகள் கொடுக்க முதல்வர் ரங்கசாமி முன்வந்தார்.‌

    இதையடுத்து ஜூன் 16ஆம் தேதி பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். ஆனால் அமைச்சர்கள் யார் என்று அப்போதும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சுமார் 9.30 மணிக்கு சென்று தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.

    5 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலில், பாஜகவிற்கு 2 அமைச்சர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் யார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

    முதல்வர் ரங்கசாமி வழங்கிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவார். அதைத்தொடர்ந்து, உள்துறை ஒப்புதல் வழங்கியதும் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  8. ஹாங்காங்: புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் முதலாவது விசாரணை இன்று தொடக்கம்

    ஹாங்காங்

    பட மூலாதாரம், Getty Images

    ஹாங்காங்கில் அறிமுகமான புதிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கின் முதலாவது விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

    இதில் முதலாவது வழக்கை எதிர்கொள்பவர் 25 வயதாகும் டோங் யிங் கிட். அவருக்கு எதிராக தேச துரோகம், பயங்கரவாதம், ஆபத்தாக வாகனத்தை ஓட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொடியை பறக்கச் செய்ததாகக் கூறி இவர் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

    ஆளும் அரசுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக மட்டுமே இந்த புதிய சட்டம் பாயும் என்று சீன பெருநில அரசு எச்சரித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஹாங்காங்கில் 2019ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய அளவிலான ஜனநாயக ஆதரவு போராட்டத்துக்குப் பிறகு இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இந்த சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவிலான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. முதலாவது விசாரணயை எதிர்கொள்ளும் டோங் யிங் கிட், 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, தனது மோட்டார் சைக்களை, காவல்துறையினர் குழுவாக நின்றபோது அவர்கள் மீது மோதும் வகையில் ஓட்டியது தொடர்பானது. அந்த சம்பவத்தில் சில காவலர்கள் காயம் அடைந்தனர்.

    மேலும், ஹாங்காங் சுதந்திர கொடியையும் அவர் தமது வாகனத்தில் பறக்கவிட்டிருந்தார். அதில் ஹாங்காங் சுதந்திரம், நமது வாழ்கால புரட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய சட்டத்தின்படி இத்தகைய செயல்பாடுகள் சட்டவிரோதமானது மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.

    இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் டோங் யிங் கிட்டுக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைக்கும். புதிய சட்டம் தொடர்பான வழக்குகளை ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் நியமிக்கும் நீதிபதிகள் அல்லது மாஜிஸ்திரேட்டுகள் பிரத்யேகமாக விசாரிப்பார்கள்.

    இந்த வழக்கு விசாரணை 15 வேலை நாட்களில் நிறைவு பெறும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.

    ஹாங்காங்

    பட மூலாதாரம், Getty Images

  9. வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஜெர்மன் தலைவர்

    ஜெர்மன் பிரதமர்

    பட மூலாதாரம், Getty Images

    ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கல் இருவேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

    முதலாவதாக ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், இரண்டாவதாக மாடனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

    66 வயதான ஏங்கெலா மெர்கல் சில நாள்களுக்கு முன்பு மாடனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாக அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மெர்கலுக்கு ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போடப்பட்டது.

    ஒருவர் வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறினாலும், அதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

    கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மெர்கல் இந்த ஆண்டு பதவி விலக இருக்கிறார்.

    ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்தன.

    ஒரு நபருக்கு இருவேறு தடுப்பூசிகளைப் போடுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இருவேறு தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான பக்கவிளைவுகள் வரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

  10. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் வழங்குகிறோம். இணைந்திருங்கள்.