நேரலை, அமெரிக்காவின் 500 சதவீத வரி மசோதா குறித்து இந்தியா கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அமெரிக்காவின் 500 சதவீத வரி விதிப்பு மசோதா குறித்து இந்தியா கூறியது என்ன?

    அமெரிக்காவின் 500 சதவீத வரி விதிப்பு மசோதா குறித்து இந்திய கூறியது என்ன?

    பட மூலாதாரம், ANI

    ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.

    இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு மசோதா குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "நீங்கள் குறிப்பிடும் அந்த மசோதா, அதாவது முன்மொழியப்பட்டுள்ள அந்தப் புதிய மசோதா குறித்து நாங்கள் அறிந்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

    ''உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்'' என்று அவர் கூறினார்.

    ''எரிசக்தியை பொறுத்தவரையில், எங்களின் அணுகுமுறை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சூழலில், நீங்கள் அறிந்தபடி சர்வதேசச் சந்தையின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டே எங்களது அணுகுமுறை அமைகிறது. அதே சமயத்தில் எங்கள் மக்களுக்கு மலிவான விலையில் எவ்வாறு எரிபொருளை வழங்குவது என்பதையும் அடிப்படையாகக் கொண்டே நாங்கள் எங்களது உத்தியைத் தீர்மானிக்கிறோம்.'' என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

  2. வெனிசுவேலாவை தொடர்ந்து கொலம்பியாவுக்கு குறி?

    வெனிசுவேலாவை தொடர்ந்து கொலம்பியாவுக்கு குறி?
    படக்குறிப்பு, குஸ்டாவோ பெட்ரோ (இடது)

    வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கொலம்பியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    ''அமெரிக்கா உலக நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால், இறுதியில் அது உலகிலிருந்து தனிமைப்படுத்தப்படும்; உலகிலிருந்து தனிமைப்படுவதன் மூலம் ஒரு பேரரசை உருவாக்க முடியாது'' என்று அவர் கூறினார்.

    வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல் மற்றும் அந்நாட்டு அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலம்பியாவைக் குறிவைக்கும் ராணுவ நடவடிக்கை “நல்ல யோசனையாகத் தோன்றுகிறது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

    வெனிசுவேலாவிலும் கொலம்பியாவிலும் உள்ள எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற இயற்கை வளங்களைக் கைப்பற்றவே அமெரிக்கா இத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கிறது என குஸ்டாவோ பெட்ரோ கூறினார்.

    அமெரிக்கா தாக்கினால் நவீன ஆயுதங்கள் இன்றி எவ்வாறு சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, "இது எங்களிடம் இல்லாத ஆயுதங்களைக் கொண்டு ஒரு பெரிய ராணுவத்தை எதிர்கொள்வது பற்றியது அல்ல. எங்களிடம் வான் பாதுகாப்பு கூட இல்லை. அதற்கு பதிலாக நாங்கள் எப்போதும் போலவே, எங்கள் மக்களையும், எங்கள் மலைகளையும், எங்கள் காடுகளையும் நம்பியிருக்கிறோம்." என்று பெட்ரோ கூறினார்.

    இரு தலைவர்களும் அண்மையில் தொலைப்பேசியில் பேசி வெள்ளை மாளிகை சந்திப்புக்கு ஒப்புக்கொண்டாலும், பெட்ரோவின் தற்போதைய கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இன்னும் பெரும் விரிசல் நிலவுவதையே காட்டுகின்றன.

  3. தமிழ்நாட்டில் கனமழை தொடரும் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது?

    தமிழ்நாடு, கனமழை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஞாயிறு வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை (ஜனவரி 10) மதியம் வட இலங்கை கரையோரம் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை இடையே கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்:

    வெள்ளிக்கிழமை (ஜனவரி 9): திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால்

    சனிக்கிழமை (ஜனவரி 10): புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம்

    கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்:

    வெள்ளிக்கிழமை (ஜனவரி 9): கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்

    சனிக்கிழமை (ஜனவரி 10): தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்

    ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11): விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்

  4. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்று

    பராசக்தி, திரைப்படச் சான்று

    பட மூலாதாரம், X/Dawn Pictures

    படக்குறிப்பு, பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் யு/ஏ சான்று வழங்கியுள்ளது.

    இந்தப் படம் நாளை (ஜனவரி 10) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் கிடைப்பது தாமதமான நிலையில் பராசக்தி படத்திற்கும் சான்று கிடைக்காமல் இருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

    இந்த நிலையில் இன்று பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதாக சான்றிதழ் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது.

  5. "மரினேரா கப்பலைக் கைப்பற்றியது சட்டவிரோதமானது" - ரஷ்ய வெளியுறவு அமைச்சகம்

    ரஷ்யா, அமெரிக்கா

    பட மூலாதாரம், Reuters

    மரினேரா கப்பல் விவகாரம் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெனிசுவேலாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.

    "கடல் பகுதிகளில் சட்டப்பூர்வமாக இயங்கி வரும் மரினேரா மற்றும் இதர கப்பல்களுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்," என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

    "கப்பலில் உள்ள ரஷ்ய குடிமக்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்கிற எங்களின் கோரிக்கையை மீண்டுமொரு வலியுறுத்துகிறோம்," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெனிசுவேலாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியதாக இரண்டு தினங்களுக்கு முன்பு அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    இதில் எண்ணெய் எடுத்துச் செல்லாத ஒரு கப்பல் வட அட்லாண்டிக் கடலில் (ஐஸ்லாந்துக்கும் பிரிட்டனுமுக்கும் இடையே) கைப்பற்றப்பட்டது. மரினேரா என்கிற பெயர் கொண்ட அந்தக் கப்பல் ரஷ்ய கொடியை ஏந்திச் சென்றது.

  6. அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம், இருவர் காயம்

    அமெரிக்கா

    பட மூலாதாரம், NewsNation

    அமெரிக்காவில் மத்திய விசாரணை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த இருவரும் வெனிசுவேலா குழுவைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாந்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

    துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆணும் பெண்ணும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களின் நிலை உடனடியாக தெரியவரவில்லை என்றும் மாநகர காவல்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி மதியம் 02:19 மணிக்கு, போக்குவரத்து நிறுத்தத்தில் வெனிசுவேலா குழுவைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்பட்டபோது அவர் விசாரணை அதிகாரிகள் மீது காரை ஏற்ற முயற்சித்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    மின்னியாபோலிஸில் மத்திய விசாரணை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த அடுத்த நாள் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்று (09/01/2026) மதியம் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து தருவது மோகன்.

  8. அமெரிக்காவில் பெண்ணை சுட்டுக்கொன்ற அதிகாரி - மக்கள் போராட்டம்

    அமெரிக்காவில் பெண்ணை சுட்டுக்கொன்ற அதிகாரி - மக்கள் போராட்டம்

    பட மூலாதாரம், Renee Nicole Good

    அமெரிக்காவின் மினசோட்டா மினியாபொலிஸ் நகரில், அமெரிக்க குடிவரவு அதிகாரி ஒருவர் 37 வயதான ரெனீ நிக்கோல் குட் என்ற பெண்ணை சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

    சுடப்பட்ட பெண் “வன்முறை கலவரக்காரர்” என்றும் குடிவரவு அதிகாரிகளை வாகனத்தில் மோத முயன்றதாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் மினியாபொலிஸ் மேயர் கூறும் போது “அதிகாரி அதிகாரத்தைப் பொறுப்பில்லாமல் பயன்படுத்தியதால்தான் ஒருவர் உயிரிழந்தார்” என்றார். மேலும், குடிவரவு அதிகாரிகள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்தார்.

    டிரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மினியாபொலிஸ் நகரில் நூற்றுக்கணக்கான குடிவரவு அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

  9. இலங்கை: வல்வெட்டித்துறையில் பாரிய பட்டத்துடன் வான் நோக்கி இழுக்கப்பட்ட இளைஞர்

    இலங்கை: வல்வெட்டித்துறையில் பாரிய பட்டத்துடன் வான் நோக்கி இழுக்கப்பட்ட இளைஞர்

    யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பகுதியில் பாரிய பட்டமொன்றை வானில் ஏற்ற முயன்ற சந்தர்ப்பத்தில் பட்டத்தின் கயிறுடன் இளைஞர் ஒருவர் வானை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

    தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பட்டங்களை வானில் ஏற்றுவது வல்வெட்டித்துறை பகுதியில் காலங்காலமாக இடம்பெற்று வரும் ஒரு செயற்பாடாகும்.

    பல்வேறு வடிவங்களிலான பட்டங்கள் ஏற்றப்படுவது வழமையானது. இந்த நிலையில், வல்வெட்டித்துறை பகுதியில் இம்முறையும் பாரிய பட்டங்களை நிர்மாணித்து வானில் ஏற்ற இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர்.

    இதன் ஒரு கட்டமாக பாரிய பட்டமொன்றை வானில் ஏற்ற இளைஞர்கள் முயன்றுள்ள தருணத்திலேயே இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

    கடும் காற்றின் அழுத்தம் காரணமாக இளைஞர்களின் கட்டுப்பாட்டை இழந்த பட்டத்தின் கயிற்றில், இளைஞர் ஒருவர் வானை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    குறித்த இளைஞர் தனது கைகளால் வலுவாகக் கயிற்றைப் பிடித்து, பின்னர் அதே கயிறு வழியாக கீழ் நோக்கி இறங்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

  10. ஜனநாயகன் பட சர்ச்சை பற்றி சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன?

    ஜனநாயகன் பட சர்ச்சை பற்றி சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன?

    ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் நிலவும் சர்ச்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "தணிக்கை செய்து அவர்களுக்கு அனுமதியைக் கொடுப்பது யார் மத்திய அரசா, மாநில அரசா? மத்திய அரசுதானே" என்று கூறினார்.

    மேற்கொண்டு பேசிய அவர், "இது கடைசி திரைப்படம் என்பதால் அதற்கு பில்டப் செய்வதற்காக, தொண்டர்களைக் கொதிநிலையில் வைப்பதற்காக இப்படிச் செய்வதாகவும் சொல்லப்படுகிறது" என்றும் குறிப்பிட்டார்.

    அதோடு, "கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை கமிஷன் அமைத்தபோது, விஜயை விசாரணைக்கு அழைக்காத போதிலும், 'சென்னையில்தான் இருக்கிறேன் முடிந்தால் கைது செய்யுங்கள்' என்று வீர வசனம் பேசினார். இப்போது சிபிஐ அழைத்துள்ளது. இப்போதும் அவர் வீர வசனம் பேசுவாரா?" என்று பேசினார் அப்பாவு.

  11. அமித் ஷா உடன் பேசியது என்ன? - எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பேட்டி

    அதிமுக, பாஜக, கூட்டணி

    பட மூலாதாரம், Edappadi K Palanisamy

    படக்குறிப்பு, அதிமுக கூட்டணியில் ஓ.பி.எஸ் சேர்வதற்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். (கோப்புப் படம்)

    தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் கூட்டணி பற்றி பேசவில்லை என்றும் தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றி பேசியதாகவும் தெரிவித்தார்.

    அப்போது சசிகலா, ஓ.பி.எஸ் அதிமுக கூட்டணியில் சேர்வது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், "அதற்கு இங்கு இடமில்லை என்று ஏற்கெனவே பலமுறை சொல்லி தெளிவுபடுத்திவிட்டோம். இதோடு 50 முறைக்கும் மேல் கூறிவிட்டேன். ஓ.பி.எஸ் எங்களுடன் சேர்வதற்கு வாய்ப்பில்லை." என்றார்.

    டிடிவி தினகரன் அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்வது பற்றிய கேள்விக்கு, "சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். வேறு எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேரும் என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது, அதிகாரப்பூர்வமாக முடிவானதும் தெரிவிப்போம்." என்று பதிலளித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. அதிமுக தான் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட்டோம். கூட்டணி என்பது அனைத்து கட்சிகளும் தான் அமைக்கின்றன. 1999-ஆம் ஆண்டு பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தது, அமைச்சரவையிலும் இடம்பெற்றார்கள். 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி வைத்தார்கள். அனைத்து கட்சிகளும் எங்களுடனும் கூட்டணி வைத்திருக்கிறார்கள், திமுக உடனும் கூட்டணி வைத்திருக்கிறார்கள்."

    "எப்போது பார்த்தாலும் பாஜகவை மதவாத கட்சி என்று கூறுகிறார்கள். மதவாத கட்சியுடன் நீங்கள் எப்படி போய் சேர்ந்தீர்கள்? அமைச்சரவையில் இடம்பெற்றீர்கள். அப்போதெல்லாம் மதவாத கட்சி இல்லையா? அதே கட்சி தான் தற்போதும் உள்ளது. எங்களை குறை சொல்ல எதுவும் இல்லையென்பதால் ஒரே குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்." என்றார்.

  12. அதிமுக - அன்புமணி கூட்டணி குறித்து ராமதாஸ் பேசியது என்ன?

    அதிமுக - அன்புமணி கூட்டணி குறித்து ராமதாஸ் பேசியது என்ன?

    அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்ததைத் தொடர்ந்து அது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துகளைத் தெரிவித்தார் ராமதாஸ்.

    அப்போது அவர், "இதுவொரு நாடகம், இந்த நாடகத்தைப் பார்த்து, ஏன் இப்படி இந்தப் பிள்ளை தந்தைக்கு எதிராகச் செய்கிறார், தந்தைக்கு எதிராக ஏன் இவ்வளவு தூரம் நடந்து கொள்கிறார், இவர் செய்வது அடாவடி, இப்படி யாரும் செய்யக்கூடாது என்றெல்லாம் மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வதைக் கேட்க முடிகிறது," என்று தெரிவித்தார்.

  13. இலங்கைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை - வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள் எவை?

    இலங்கை, கனமழை எச்சரிக்கை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இலங்கையில் பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

    இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்க நிலைமையானது, பொத்துவில் பகுதியிலிருந்து சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி பயணித்து கிழக்கு கரையோர பகுதியை அண்மிக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 12 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது.

    மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான காலி வரையான கரையோர பகுதிகளில் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், நாட்டை சூழவுள்ள கரையோர பகுதிகளிலும் சில சந்தர்ப்பங்களில் இடைக்கிடை இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை அறிக்கை கூறுகின்றது.

    கரையோர பகுதிகளில் காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், கடல் அலை 2.5 முதல் 3.5 மீட்டர் வரை உயர்ந்து, சற்று சீற்றத்துடன் காணப்படும் எனக் கூறப்படுகின்றது,

    இந்த காலப் பகுதியில் கடல்சார் தொழிலாளர்கள் கடல் தொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை

    இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கையின் பிரகாரம், ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலுள்ள நீர் நிலைகளுக்கு அதிக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுகின்றது.

    இலங்கை, கனமழை எச்சரிக்கை

    பட மூலாதாரம், MET DEPARTMENT (SRI LANKA)

    இதனால், குறித்த பகுதிகளில் நீர்நிலைகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதேவேளை, இலங்கையில் எதிர்வரும் சில தினங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற அதிக மழையுடனான வானிலை காரணமாக திட்வா புயலில் தாக்கத்தை விடவும் அதிக தாக்கத்தை யாழ்ப்பாணம் மாவட்ட எதிர்கொள்ள நேரிடும் என வானிலை அவதானிப்பாளரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா எச்சரிக்கை விடுக்கின்றார்.

    நாட்டை அண்மித்து நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக யாழ். மாவட்டத்தில் சுமார் 650 மில்லிமீட்டருக்கும் மேலான மழை வீழ்ச்சி பெய்யக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

    மண்சரிவு எச்சரிக்கை

    இலங்கையை அண்மித்துள்ள நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமையை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

    கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தன்தாஹின்ன மற்றும் வலபனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

    பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.

  14. அமெரிக்காவில் ஐசிஇ அதிகாரி சுட்டதில் பெண் பலி - என்ன நடந்தது?

    அமெரிக்கா, மின்னியாபோலிஸ்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை (ஐசிஇ) அதிகாரி ஒருவர் சுட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    "வன்முறையான கலவரக்காரர்களில் ஒருவர் அவரது வாகனத்தை ஆயுதமாக்கி" அதிகாரி மீது ஏற்ற முயற்சித்தார் என உள்நாட்டு பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் தற்காப்புக்காக அந்த ஐசிஇ அதிகாரி சுட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

    துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

    இந்த துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்துள்ளார்.

    மத்திய விசாரணை அதிகாரிகள் அங்கு இருப்பது சூழ்நிலையை மேலும் மோசமாக்குவதாக மின்னியாபோலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அனைவரின் பாதுகாப்பிற்காகவும் ஐசிஇ அதிகாரிகள் வெளியேற வேண்டும் என மின்னியாபோலிஸ் செனடரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான டினா ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    மின்னியாபோலிஸ் மேயர் ஜேகப், மத்திய அதிகாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என திரிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை தற்போது மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ) விசாரித்து வருகிறது.

    மத்திய அதிகாரிகள் அங்கு பணியமர்த்தப்பட்டதில் இருந்தே இது போன்ற சம்பவம் நடைபெறும் என எச்சரித்து வந்ததாக மின்னியாபோலிஸ் ஆளுநர் டிம் வால்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

    கடந்த சில வாரங்களில் 2,000-க்கும் மேற்பட்ட மத்திய அதிகாரிகள் மின்னியாபோலிஸிற்கு அனுப்பப்பட்டதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் 37 வயதான ரெனி குட் என்றும் அவர் அமெரிக்க குடிமகன் என்றும் சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது.

  15. வணக்கம் நேயர்களே!

    இன்று (08/01/2026) மதியம் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து தருவது மோகன்.

  16. ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவிப்பு

    ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவிப்பு

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வெனிசுவேலா எண்ணெய் உடன் தொடர்புடைய ஒரு டாங்கர் கப்பலை வட அட்லாண்டிக் கடலில் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதற்கு முன், மரினேரா என்ற அந்த கப்பலை நோக்கி பல ராணுவ விமானங்கள் சென்றன. ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகளில், அந்த கப்பலுக்கு அருகில் ஒரு அமெரிக்க கப்பல் இருப்பதும் தெரிந்தது.

    பிபிசி வெரிஃபை அந்த டாங்கர் கப்பலின் பயணத்தைத் தொடர்ந்து கண்காணித்தது. தற்போது அந்த கப்பல் ஐஸ்லாந்தின் தெற்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

    அந்த கப்பல், அமெரிக்க தடைகளை மீறியதாகவும், இரானிய எண்ணெயை ஏற்றி சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் அது வெனிசுவேலா எண்ணெயை ஏற்றி சென்றதாக கூறப்பட்டாலும் தற்போது அந்த கப்பல் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவிப்பு

    பட மூலாதாரம், US European Command

  17. 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்கா - கராச்சி இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

    10 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்கா - கராச்சி இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

    பட மூலாதாரம், Getty Images

    வங்கதேச அரசுக்கு சொந்தமான பீமான் வங்கதேச ஏர்லைன்ஸ், டாக்கா - கராச்சி - டாக்கா வழித்தடத்தில் தனது சர்வதேச விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளது. இந்த விமானச் சேவை வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

    வங்கதேசத்தின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான 'டெய்லி ஸ்டார்' செய்தியின்படி, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த நேரடி வான்வழித் தொடர்பு மீண்டும் தொடங்குகிறது.

    பிபிசி வங்க சேவை செய்தியின்படி, பீமான் வங்கதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை பொது மேலாளர் போஸ்ரா இஸ்லாம், செய்திக்குறிப்பு ஒன்றின் வாயிலாக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

    முதற்கட்டமாக இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விமானங்களும் வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

    சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தூதரக தொடர்புகளைத் தொடர்ந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட்டு வரும் சூழலில் இந்த விமானச் சேவை தொடங்கப்படுகிறது.

  18. “வெனிசுவேலாவின் நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது” – எஸ். ஜெய்சங்கர்

    ஜெய்சங்கர் - வெனிசுவேலா

    பட மூலாதாரம், Getty Images

    வெனிசுவேலாவில் சமீபத்தில் நடந்தவை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

    லக்சம்பர்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெய்சங்கர், வெனிசுவேலா மக்களின் நலனும் பாதுகாப்பும் முதன்மையாக கருதப்பட வேண்டும் என்றும், அதனை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    “ வெனிசுவேலா மக்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும் ஒரு தீர்வை அடைவதற்காக, அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறினார்.

    இந்த நெருக்கடியிலிருந்து வெனிசுவேலா மக்கள் பாதுகாப்பாக வெளியே வருவதும், நல்ல சூழ்நிலைக்குச் செல்வதுமே இந்தியாவின் முதன்மையான கவலை என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், “வெனிசுவேலா மக்களின் நிலைமையும் அந்நாட்டின் சூழலும் மேம்பட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். ஏனெனில், இந்த நாட்டுடன் இந்தியாவுக்கு நீண்ட காலமாக நல்ல மற்றும் பழமையான உறவுகள் இருந்து வருகின்றன” என்று ஜெய்சங்கர் கூறினார்.

  19. ரஷ்ய எண்ணெய் கப்பலை துரத்தும் அமெரிக்கா - ரஷ்யா என்ன செய்கிறது?

    அமெரிக்கா - ரஷ்யா

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்யா தனது எண்ணெய் கப்பலைப் பாதுகாப்பதற்காக கடற்படையை களமிறக்கியுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் (CBS) செய்தி கூறுகிறது.

    அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கப் படைகளால் துரத்தப்பட்டு வரும் அதே எண்ணெய் டேங்கர் கப்பல் தான் இது. வெனிசுவேலா கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கப்பல், தற்போது சரக்கு ஏதுமின்றி காலியாக உள்ளது.

    இக்கப்பல் செவ்வாய்க்கிழமை ஸ்காட்லாந்து - ஐஸ்லாந்து கடற்பரப்பிற்கு இடையே இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கடந்த மாதம், வெனிசுவேலாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் தடை செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்களை 'கடல்வழி முற்றுகையிட' உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை 'கடற்கொள்ளை' என வெனிசுலா அரசாங்கம் கண்டித்தது.

    கடந்த சனிக்கிழமை வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்வதற்கு முன்பாக, கப்பல்கள் மூலம் வெனிசுவேலா போதைப்பொருள் கடத்துவதாக டிரம்ப் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

    கடந்த மாதம், கரீபியன் கடலில் 'பெல்லா 1' என்ற கப்பலில் ஏறி சோதனை செய்ய அமெரிக்கக் கடலோர காவல்படை முயற்சித்தது. அச்சமயத்தில், அந்தக் கப்பல் வெனிசுவேலாவை நோக்கிச் செல்வதாகக் கருதப்பட்டது. அமெரிக்காவின் தடைகளை மீறியதாகவும் இரானிய எண்ணெயைச் சுமந்து சென்றதாகவும் குற்றம் சாட்டி, அந்தக் கப்பலைப் பறிமுதல் செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் பிடிவாரண்ட் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து அந்தக் கப்பல் தனது பயணப் பாதையை மாற்றியதோடு, 'மெரினேரா' என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டது.

    அறிக்கைகளின்படி, அது தனது கயானா நாட்டுக்கொடியை மாற்றிவிட்டு ரஷ்ய கப்பலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. அக்கப்பல் ஐரோப்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில், சுமார் பத்து அமெரிக்க இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தக் கப்பல் தொடர்பான சூழ்நிலையைத் தான் 'கண்காணித்து' வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

  20. இரான் போராட்டத்தில் 36 பேர் பலி என மனித உரிமை அமைப்பு தகவல்

    இரான் போராட்டம்

    பட மூலாதாரம், BBC Pesian

    இரானில் கடந்த 10 நாட்களாக நீடிக்கும் போராட்டங்களில் குறைந்த பட்சம் 36 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இரானைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி முகமை (HRANA), உயிரிழந்தவர்களில் 34 பேர் போராட்டக்காரர்கள் என்றும், இருவர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

    இரான் அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமான உயிரிழப்புப் பட்டியலை வெளியிடவில்லை, இருப்பினும் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பிபிசி பாரசீக சேவை இதுவரை, உயிரிழந்த 20 நபர்களின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி முகமை (HRANA) அமைப்பின் தகவலின்படி, இந்த வன்முறையின் போது 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் 2,076 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பொருளாதார நெருக்கடி காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், இப்போது இரானில் மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 27 மாகாணங்களுக்குப் பரவியுள்ளன.