
ஒசாமா பின் லாடனின் மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் நியுயார்க் நீதிமன்றதில் இன்னும் சிறிது நேரத்தில் ஆஜராகவுள்ளார்.
ஒசாமா பின் லாடனின் மருமகனான, சுலைமான் அபு கைத் என்ற இவர், வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டார் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறின.
இவர் மீது அமெரிக்கர்களைக் கொல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் அவர் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டு, ஜோர்டானுக்கு நாடு கடத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து அமெரிக்கவுக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டார் என்று வரும் செய்திகள் பற்றி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அபு கைத்தை குவாண்டனாமோ குடாவில் இருக்கும் அமெரிக்க தளத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்று சில குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருக்கிறார்கள்.
ஆனால் இவரை ஒரு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டி விசாரணை செய்வதுதான் அமெரிக்க நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று ஒபாமா நிர்வாகம் நம்புவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.







