You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பதி தரிசனம் தாமதமானதால் கட்டப்பட்ட கோவில் - 9 பேர் பலியானது எப்படி?
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பலாசா-காசிபுக்கா என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் பிபிசியிடம் கூறினர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏகாதசியை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் கூடியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. பக்தர்களின் திடீர் கூட்டமே நெரிசலுக்கு காரணமாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் பலாசா அரசு மருத்துவமனை மற்றும் பலாசா சிறுநீரக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் பற்றி கேள்விப்பட்டதும் உறவினர்களும் கோவிலுக்கு விரைந்தனர்.
கோவிலில் உள்ள தடுப்பு கம்பி இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆந்திர அமைச்சர் அச்சன் நாயுடு கூறினார். இது புதிதாக கட்டப்பட்ட தனியாருக்கு சொந்தமான கோயில் என்றும், இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், சுமார் 2,000 பேர் வருவார்கள் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் 6 காவலர்கள் மற்றும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் பாதுகாப்பில் இருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு