You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து - பல மீட்டர் உயரம் எழுந்த தீப்பிழம்பு
அரியலூரில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. லாரியின் ஓட்டுநர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
சிலிண்டர் ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அரியலூர் மாவட்டம் வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும் போது அந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததன் காரணமாக லாரி கவிழ்ந்துள்ளது. இதனால் லாரியில் ஏற்பட்ட தீயினால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லாரி கவிழ்ந்த போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் வெடித்து சிதறின. இதன் காரணமாக லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு புகை மண்டலம் சூழ்ந்தது.
அந்த லாரி, அரியலூர் தனியார் விற்பனையாளர் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பதும் லாரி ஓட்டுநர் கனகராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. ஓட்டுனர் தீக்காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு