You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவுக்கு சவால் விடுவதற்காக சிங்கப்பூருடன் இணையும் இந்தியா
பிரதமர் நரேந்திர மோதி இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்வதன் கடைசி கட்டமாக செப்டம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன், அந்த நாட்டின் பெரிய தொழிலதிபர்களையும் பிரதமர் மோதி சந்தித்தார்.
பிரதமரின் இந்தப் பயணத்தின்போது இந்தியா- சிங்கப்பூர் இடையே பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. செமிகண்டக்டர் கிளஸ்டர்களின் வளர்ச்சி, வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கும். சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோதி சந்திப்பது இதுவே முதல்முறை.
இந்தியாவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மொபைல் போன், விண்கலம், விசைப்பலகை என எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும் அவற்றில் செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் துறையில் உலகம் ஒரு சில நாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. இதன் காரணமாக கோவிட் காலத்தில் அதன் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது இந்தியா தனது செமிகண்டக்டர் தேவையின் பெருமளவை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது.
செமிகண்டக்டர் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கான சாத்தியக்கூறுகள் நிறைந்ததாக சிங்கப்பூர் உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)