You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் 102 வயது மூதாட்டி குணமடைந்தார்
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
உலக சுகாதார நிறுவன பிரதிநிதியை வெளியேற்றும் புரூண்டி
உலக சுகாதார நிறுவனத்தின் பிரநிதி மற்றும் மூன்று சுகாதார நிபுணர்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கிழக்கு ஆப்ரிக்க நாடான புரூண்டி உத்தரவிட்டுள்ளது.
இந்த வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு இடையே, வரும் மே 20-ஆம் தேதி புரூண்டியில் பொதுத்தேர்தல் நடந்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் இந்த தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களில், தனிநபர் இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறிதும் கடைபிடிக்கப்படுவதில்லை.
புரூண்டியில் இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். ஆனால் அரசு வெளியிடும் கொரோனா தொற்று தரவுகளின் சந்தேகம் இருப்பதாக மனித நேய அமைப்புகள் கூறி வருகின்றன.
கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா?, இந்தக் கட்டுரை உங்களுக்கானது
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்?
எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள்.
நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
இன்றைய நிலவரம் - சில முக்கிய செய்திகள்
- கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள், தங்களது சொந்த ஊர் திரும்ப விரும்பினால், http://nonresidenttamil.org என்ற இணைய படிவம் வாயிலாக பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றிய 102 வயது மூதாட்டி சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்துள்ளார்.
- தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கு ரஷ்யாவின் கட்டுமானத்துறை அமைச்சர் விளாதிமிர் யகுஷெவ்-க்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
- வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய குடிமக்களைக் காப்பாற்ற 14 போர் கப்பல்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய கப்பல் படை அதிகாரியான ஜி. அஷோக் குமார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
- விமான நிலையங்களில் சமூக விலகலை கடைப்பிடிப்பது இயலாத காரியமென லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைவர் கூறி உள்ளார்.
- ஆப்கானிஸ்தானில் ஏழு மில்லியன் குழந்தைகள் உணவு இன்றி பசியால் வாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என `சேவ் தி சில்ரன்` அமைப்பின் செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'கொரோனாவால் தடுப்பூசி இல்லாமல் போகும் அபாயத்தில் பல லட்சம் குழந்தைகள்'
அமெரிக்க மூத்த சுகாதார ஆலோசகர் சாட்சியம் அளிக்க வெள்ளை மாளிகை தடை
அமெரிக்காவில் கோவிட் 19 நோய் தொற்றை அதிபர் டிரம்ப் எதிர்கொள்வதை ஆராயும் அந்நாட்டு காங்கிரஸ் கமிட்டியில் மூத்த சுகாதார ஆலோசகரான மருத்துவர் அந்தோனி ஃபாசி சாட்சியம் அளிக்க வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
அதிபர் டிரம்ப் இத்தொற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து மே 6ஆம் தேதி அந்தோனி ஃபாசி சாட்சியம் அளிக்க கோரப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 65,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை ஜனநாயக கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
சரியான நேரத்தில் காங்கிரசிடம் சாட்சியம் அளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் தினமும் அதிபர் டிரம்ப செய்தியாளர்களை சந்திக்கும் போது, மருத்துவர் ஃபாசியும் உடன் இருப்பார். ஆனால், கடந்த சில வாரங்களில் அவர் அதிகம் அங்கு வராதது குறிப்பிடத்தக்கது.
TB தடுப்பூசியால் இந்தியர்களுக்கு கொரோனா வராதா?
பிசிஜி தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என இதற்கு ஆதாரமாக அமெரிக்க கல்லூரி ஒன்றில் வெளியான ஆய்வையும் சுட்டிக்காட்டி சிரியா, இந்தியா என பல நாடுகளில் இப்போதும் ஒரு தகவல் உலவுகிறது.
ஆனால் அந்த ஆய்வு சொல்வதென்ன? இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
உலகெங்கும் ஆளில்லா வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகள்
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், விலங்குகளுக்கு மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நகரில் வலம் வர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நகர் பகுதிகளில் உள்ள விலங்குகள் தெருக்களை உல்லாசமாக சுற்றி திரிவதைப்பார்த்து மனிதர்களும் மகிழ்கின்றனர். இது தவிர பூங்காக்கள் மற்றும் தேசிய விலங்குகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளும், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மகிழ்ச்சியாக இருப்பதாக பூங்கா கண்காணிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
வெளி மாநிலங்களில் சிக்கி இருக்கும் தமிழர்களை கொண்டு வர ஏற்பாடு
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள், தங்களது சொந்த ஊர் திரும்ப விரும்பினால், http://nonresidenttamil.org என்ற இணைய படிவம் வாயிலாக பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீங்கள் வெளிமாநிலங்களில் சிக்கி இருக்கிறீர்கள் என்றால் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிங்கப்பூரில் 102 வயது மூதாட்டி குணமடைந்தார்
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றிய 102 வயது மூதாட்டி சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்துள்ளார்.
யாப் லே ஹோங் என்றபெயருடைய அந்த மூதாட்டி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
மூதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் இவருக்கும், உடன் தங்கியிருந்த 15 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வழங்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக யாப் லே ஹோங் குணமடைந்துள்ளார். இவர் கடந்த 1918இல் நிகழ்ந்த ஸ்பேனிஷ் ஃபுளூ கொள்ளைநோய் காலத்தில் பிறந்தவர்.
இந்நிலையில் அங்கு இன்று புதிதாக 447 பேருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக உறுதியாகி உள்ளது.
சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,548ஆக அதிகரித்தது. ஒட்டுமொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதிலும், கடந்த ஒன்பது நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 1,000க்கும் கீழ் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையே சிகை அலங்கார கடைகள், வீட்டிலிருந்தே உணவுப் பண்டங்களைத் தயாரிப்போர், சலவைச் சேவை ஆகிய பணிகளைச் செய்வதற்கான தடை மே 12ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தங்குவிடுதிகளில் உள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இது அவ்வளவு எளிதாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கை அல்ல என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகமது தெரிவித்துள்ளார்.
உணவின் தரம், அளவு ஆகியவற்றில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், சுமார் இரண்டு லட்சம் அந்நியத் தொழிலாளர்களுக்கு 34 உணவு வழங்கும் நிறுவனங்கள் தினமும் உணவு வழங்குவதாக அவர்சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஒரு மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கும் ஜேகே ரெளலிங்
மிகவும் புகழ்பெற்ற ஹேரி பாட்டர் புத்தகத்தின் எழுத்தாளரான ஜேகே ரெளலிங், கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ, இரு தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்க உள்ளார்.
Crisis எனப்படும் வீடு இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனம் மற்றும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கும் Refuge என்ற தொண்டு நிறுவனத்திற்கும் இத்தொகை பிரித்து அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை:தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் பொது முடக்க தளர்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு,புதிதாக கொண்டுவரப்பட்ட தளர்வுகள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைபாடுகள் இல்லாமல், நோய் கட்டுப்பாடு பகுதிகள் என்று கண்டறியப்பட்ட பகுதிகள் தவிர பிற எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.நோய் தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார் போல தளர்வுகளை அனுமதித்துள்ளது.
இதன்படி, சிகப்பு மாவட்ட பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே,நோய் தடுப்பு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு, சிகப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு,தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளுக்கு மட்டும், அமைச்சரவை கூட்ட முடிவின்படி ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தபடி அதிக தளர்வுகள் வழங்கப்படவில்லை.
எனவே,இந்த தளர்வுகள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பணியை தொடங்கிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலில் அதிக எண்ணிக்கையிலான நோய் தொற்று சென்னையில் ஏற்படுவதால், சென்னையில் நோய் தொற்றை குறைக்க தமிழக அரசு கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரியாக டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனை பணியமர்த்தியுள்ளது.தமிழகத்தில் மே 1 வரை பதிவாகிய மொத்த நோய் தொற்று எண்ணிக்கையான 2526 நபர்களில், சென்னை நகரத்தில் மட்டும் 1082 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறிவித்திருந்தது.
நேற்று (மே 1) ஒரே நாளில் தமிழகத்தில் புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கையான 203 நபர்களில், சென்னையில் மட்டும் 176 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.சிறப்பு அதிகாரியாக தனது பணியை தொடங்கிய ராதாகிருஷ்ணன், கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்தார்.
இன்று (மே 2) அவர், கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் ஹவுஸ், வி.ஆர். பிள்ளை தெரு, முனுசாமிபுரம் போன்ற பகுதிகளை பார்வையிட்டார். பின்பு அங்கு பணியாற்றி வரும் காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள், கடைமடை ஊழியர்கள் போன்றவர்களிடம் கொரோனா தடுப்பு பணிகளை மேலும் ஊக்குவித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், ஒவ்வொரு வீட்டிற்கும் மாநகராட்சி மூலம் 250 கிராம், 500 கிராம் கிருமி நாசினி, ப்ளீச்சிங் பவுடர்களை வழங்கவேண்டும் என அறிவித்தார்.
இந்த ப்ளீச்சிங் பவுடரை தங்களின் வீட்டிற்கு பயன்படுத்தி வீட்டினையும், சுற்று புறத்தினையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என மக்களிடம் அறிவுறுத்தினார். கபசுர குடிநீர் அந்த பகுதி மக்களுக்கு வழங்கவும் சித்த மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதியில் மக்களிடம் நோய் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு நேரடியாக சந்தித்து பேசினார்.
பின்னர், வட சென்னை, சூளை பகுதியிலுள்ள தட்டாங்குளம், போதிலால் தெரு மற்றும் பட்டாளம் மார்க்கெட் போன்ற நோய் அதிகம் காணப்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கண்டிப்பாக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும், சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், அடிக்கடி வெளியில் வர முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில், தொடர்ந்து ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 2,757 நபர்களில் 1,828 பேர் ஆண்கள் என்றும், 928 பேர் பெண்கள் என்றும் ஒருவர் திருநங்கை என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 13-60 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.
கொரோனா தாக்கத்தால் சென்னையை சேர்ந்த 76 வயது பெண்மணி ஒருவர் நேற்று இறந்துவிட்டார் என்பதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக இன்று(மே 2) 29நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1341ஆக உள்ளது.
தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையான 2,757 நபர்களில், 1,257 பேர் சென்னை மாவட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் தொற்றை குறைக்க தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போதுவரை, 35,418 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கண்காணிப்பில் 40 நபர்கள் உள்ளனர்.
"போர் முடியவில்லை; போர்க்களம் மட்டுமே மாறியுள்ளது" : மலேசிய அரசு
மலேசியாவில் இன்று புதிதாக மேலும் 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,176 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,326 என்று சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 103 பேரை பலி கொண்டுள்ளது.
"சமூக அளவிலும், தனி மனிதர்கள் என்ற அளவிலும் நாம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயங்கள்தான். சமூக ஒழுக்கத்துடனும் கடமையுடனும் செயல்பட வேண்டும் என்பதே அந்த இரண்டு விஷயங்கள் ஆகும். இவ்விஷயத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லையெனில், கோவிட்-19க்கு எதிரான போர் அடுத்து வரும் வாரங்களில் மிகக் கடினமானதாக மாறிவிடும்."
"மற்ற நாடுகளில் வெளிநாட்டவர்கள் நுழைவதற்கு ஏற்ப எல்லைகளை திறந்துள்ளன. ஆனால் நாம் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தாயகம் திரும்பும் மலேசியர்கள் கூட 14 நாட்களுக்கு கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்."
"பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்பது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையே தவிர, அடியோடு நிறுத்தும் முயற்சி அல்ல," என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சொந்த ஊர் திரும்ப முயன்ற நபர்கள்
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த சிலர் கான்கிரீட் கலவை இயந்திரகான்கிரீட் கலவை இயந்திரத்தில் ஒன்றில் ஒளிந்துகொண்டு வீடு திரும்ப முயற்சித்ததாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து லக்னோ சென்று கொண்டிருந்த அந்த சிமேன்ட் ட்ரக் வாகனம், மத்தியப் பிரேதச மாநிலம் இந்தூரில் பிடிப்பட்ட போது, அதிலிருந்த 18 பேர் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் அந்த ட்ரக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் உமாகாந்த் செளத்ரி தெரிவித்தார்.
அந்த ட்ரக்கில் இருந்த 18 பேரில் 14 பேர் வெளிமாநிலத் தொழிலாளர்கள் என பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
உங்கள் கைகளை சரியாக கழுவுவது எப்படி?
கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் முறையாக எப்படி கைக்கழுவ வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை விளக்குகிறது இந்த காணொளி.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விரைவில் நிவாரணம் - நிதின் கட்கரி
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார நிவாரணங்கள் குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்த பரிந்துரைகளை பிரதமர் மோதி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.